வியாழன், 23 ஜனவரி, 2020

சாத்தானுக்கு மணிமண்டபம் கட்டுதல்


பேய்கள் அரசாளும் சித்திரையில் 
பிணங்கள் வீதியில் திரிய 
நிறை அம்மாவாசையில் 
சாத்தானுக்கு மணிமண்டபம் கட்டும் 
திட்டம் பிறந்தது.

நாடு பிடிக்கும் குள்ள சாத்தானும் 
ஊர் சுற்றும் வேதாளமும் 
கால் நக்கும் பேய்களை 
எழுப்பி ஊளையிட்டன.

குரங்குகள் கையில் தீப்பந்தங்களோடு 
நகருக்குள் புக 
ஓநாய்களும் நரிகளும் 
கண்கள் மின்ன எச்சில் முழுங்கி 
காத்திருந்தன.

தெய்வங்களை ஆற்றில் மூழ்கடித்து 
தேவதைகள் சிறை பிடிக்கபட்டன.
ரத்தம் குடிக்கும் மனிதர்களுக்கு 
விடுதலை அளிக்கபட்டது.

தென் திசையில் நாடொன்று 
விழித்திருந்தது.அது 
ஆயிரம் ஆண்டுகளாக மெல்ல
உருவாகி வந்திருந்தது.
குள்ள சாத்தானின் மாயாஜாலங்கள் 
அந்த மண்ணில் வேடிக்கையாகின.

சாத்தானின் ரத்த காட்டேரிகள் எல்லையில் 
திருப்பி அனுப்பி வைக்க பட்டன.
தீபபந்தம் ஏந்திய குரங்குகள் 
துரத்தி அடிக்க பட்டன.
சாத்தானும் வேதாளமும் 
நுழையவே முடியாத தென்நாட்டை 
ஏங்கி பெரு மூச்செறிந்தன.

சூறாவளியை தடுத்து நின்ற 
பெரும் புலிகள் மூப்பிலும் 
நோயிலும் ஓர்  நாள் மறைந்தன.
வேதாளம் ஆணவத்தோடு 
உள்ளே நுழைந்தது.
அதன் கை பட்டவர்கள் தலை 
சாம்பலானது.
பாய வேண்டிய வேட்டை நாய்கள் 
வேதாளத்தின் காலை நக்கின.
வேட்டை நாய்களாய் இருந்தவை 
அடிமை நாய்களாய் மாறி
சிம்மாசனத்தில் அமர்ந்தன.

சாத்தான் அகங்காரமாய் சிரிக்க 
தென்நாட்டை இருள் சூழ்ந்தது.
வீதிகளில் ரத்தம் பரவ வடக்கே 
மணி மண்டபம் உயிர் பெற்று 
கொண்டிருந்தது.

School Dhevathai -02

 ஒரு பெண் உள்ளே வந்தவுடன் எல்லாக் காலமும் வசந்த காலமாகி விடுகிறது.கடவுள் நமக்கு எல்லா நிகழ்வுகளையும் அவரே நேர்த்தியாக நெய்து தருகிறார் என தோன்ற ஆரம்பித்து விடுகிறது. திட்டமிட்டு அவளை பார்க்க விரும்பிய எத்தனையோ  நாட்கள் நடக்காமல் போயிருக்கிறது.எதிர்பாரத தருணங்கள் நிகழும் போது பிரபஞ்சம் நமக்கு கருணை காட்ட தொடங்கியிருக்கிறது என புரிந்து கொள்ளலாம்.அவ்வாறான ஒரு நாள் காலை.டியூசன் மாறியிருந்தேன்.இரண்டு வேளையும் வர வைத்திருந்தார்கள்.பள்ளி ஆரம்பிக்கும் முன்னே டியூசன் போக வேண்டும்.ஊர் நிசப்தமாக இருந்தது.மெல்ல சைக்கிள் மிதித்து போய் கொண்டிருந்தேன். ஒரு குளத்தை தார்சாலை 'ட'வடிவில் இணைத்து கொண்டிருந்தது.அதன் ஒரு முனையில் வந்த போது மறுமுனையில் அவள் வந்தாள்.ஒரு கணம் எதுவும் தோன்றவில்லை. தாகமெடுத்து நாக்கு மேலன்னத்தோடு ஒட்டி கொண்டது.எத்தனையோ முறை பள்ளியில் பார்த்திருந்தாலும் அவளை தனியே பார்க்க முடிந்ததே இல்லை.இந்த சாலையை கடவுள் தான் படைத்திருக்க வேண்டும்.அங்கே யாருமே இல்லை. கம்பருக்காவது அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள் என்பதோடு முடிந்தது.எனக்கோ அவள் பார்க்கும் போது பிரபஞ்சமே பார்த்த மாதிரி இருந்தது.இதெல்லாம் சில நிமிடங்கள் தான் அவள் எதிரே வந்த போது அவளை பார்க்க கூட முடியாமல் திரும்பி கொண்டேன். ஒளி வீசும் முழுமதியை தனியே பார்க்கும் தைரியம் அப்போது வந்திருக்கவில்லை.

சலங்கையிட்டால் ஒரு மாது  பாடலில் வருகிற அமலா மாதிரி தான் அவள் இருந்தாள்.அந்த முகம் லட்சோப லட்சம் குடங்கள் பாலை ஊற்றி பூஜிக்கிற முகம்.கிருஷ்ணனின் பரமாவதாரத்தில் எதை பார்ப்பது எதை விடுவது என குழம்பி நிக்கிற கர்ணன் மாதிரி, அவள் முகத்தை எப்போதும் பரவசத்தோடு தான்  பார்க்க முடிந்தது. சனிக்கிழமைபள்ளிக் கூடம் இருந்தால் எல்லா வகுப்பிற்கும் ஒரே நேரத்தில் விளையாட விட்டு விடுவார்கள்.அன்று எல்லாரையும் வரிசையாக நிறுத்தி ஒவ்வோர் வகுப்பாக வீட்டுக்கு அனுப்பி கொண்டிருந்தார்கள்.எனக்கு பக்கத்து வரிசையில் தான் அவள் நின்றாள்.அப்போது தான் அவள் முழுமையும் பார்த்தேன்.வாழை மரத்தை தூணில் சாய்த்திருக்க மாதிரி இருந்தாள்.

பொதுத்தேர்வு நடக்க நாற்பது நாட்களே இருக்கும் நிலையில் போர்டில்  கவுண்டவுன் எழுத ஆரம்பித்திருந்தார்கள்.ஒவ்வொர் எண்ணாக குறைய ஆரம்பித்த போது அவளிடம்  பேசும் வாய்ப்புகளும் குறைந்து கொண்டிருப்பதாக தோன்றியது.இந்த சூழ்நிலையில் தான் அன்று ஸ்கூலில் அறிவியல் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்திருந்தார்கள்.இரண்டு சின்ன பைப்புகளின் நடுவே கண்ணாடியை வைத்து நீர்முழ்கி கப்பலில் இருந்து வெளியே பார்க்க உதவும் ஒரு கருவியை செய்திருந்தேன்.ஒரு பெரிய அறையில் எல்லாருக்கும் இடம் கொடுக்க பட்டிருந்தது.கதவின் அருகே  கருவியோடு நின்று கொண்டிருந்தேன். ஒவ்வோர் வகுப்பாக வந்து போய் கொண்டிருந்தார்கள்.எங்கள் வகுப்பு வந்த போது அவள் தோழிகளோடு வந்தாள்.அவள் அருகில் நின்ற போது கூச்சமாக இருந்தது. அவள் தோழியிடம் எல்லாரிடமும் சொன்ன அதே சம்பிரதாய வார்த்தைகளை சொல்லி விளக்கினேன்.தோழி அவளிடம் கொடுத்தாள். அவள் கொஞ்ச நேரம் கையில் வைத்திருந்து பார்த்து விட்டு திருப்பி கொடுத்தாள்.எனக்கு சொந்தமான ஒன்றை அவள் கையில் வைத்திருந்ததே ஆனந்தமாக இருந்தது.எதுவும் பேச வாய் வரவில்லை.விக்கித்து விட்டது மாதிரி இருந்தது.அவள் அரங்கத்தை விட்டு வெளியேறும் வரையிலும் திரும்பி திரும்பி பார்த்து கொண்டிருந்தாள்.

கண்காட்சி முடிந்து சேர் எல்லாம் அடுக்கி கதவு பூட்டி வைக்கும் போது ஐந்து மணிக்கு மேல் ஆகியிருந்தது.மொத்த பள்ளியும் கிளம்பி போயிருந்தது.மெதுவாக நடந்து சைக்கிள் ஸ்டாண்ட் வந்து கொண்டிருந்தேன்.அவளும் அவள் தோழிகளும் மட்டும் அங்கு நின்று கொண்டிருந்தார்கள்.அவர்களை கடந்து போய் சைக்கிளை எடுத்தேன்.நிமிர்ந்த போது அவள் அருகில் வருவது தெரிந்தது.அவள் தோழிகள் தூரத்தில் நின்று கொண்டிருந்தார்கள். அவள் அருகில் வந்து நின்றாள்.பேச ஆரம்பிப்பவளை போல் லேசாக தொண்டையை செருமினாள். எனக்கு உள்ளூர நடுங்க ஆரம்பித்திருந்தது. இந்த மாதிரியான சூழலை எதிர்கொள்கிற எந்த தைரியமும் அப்போது இல்லை.தலையை குனிந்த படி அவளை பார்க்க கூட செய்யமால் சைக்கிளை எடுத்து  மிதிக்க ஆரம்பித்தேன். அவள் முதுகிற்கு பின் பார்ப்பதாக தோன்றியது.நான் திரும்பவே இல்லை.

*

வெறிச்சோடி இருந்த சாலையில் சைக்கிள்கள் தென்பட்டன.அவள்  இப்போது படிக்கிற பள்ளிக்கூட பிள்ளைகள் வந்து கொண்டிருந்தார்கள்.அவளை காணவில்லை.
அவள் ஊரில் இருந்து இந்த ஒரே வழி தான் இருக்கிறது.நேரம் ஆகி கொண்டிருந்தது.அவள் முன்பே போயிருந்தால் இன்னைக்கு பார்க்க முடியாது.சஞ்சலமாக இருந்தது.இவ்வளவு காலையில் வந்து அவளை பார்க்காமல் போவதை பற்றி யோசிக்க முடியவில்லை.அங்கேயே நின்று கொண்டிருந்தேன்.

ஒன்றரை வருடங்களுக்கு முன் அவள் பேச வந்த நியாபகங்கள் அலைக்கழித்து கொண்டிருந்தது. நேரம் அதிகமாக ஏமாற்றமாக வந்தது.மழை வந்தால் சிரமமாகி விடும்.இனியும் நிற்பது பயனில்லை என்று தோன்றியது. திரும்பி வருகிற வழியில் ஒரு  சின்ன ஊருக்குள் நுழைந்து வெளியேறும் போது எதிரில் வருகிற முகம் தெரிந்த மாதிரி இருந்தது.அவள் தோழி.மனம்  பரபரப்படைந்து.அப்படியானல் அவளும் வந்திருக்க வேண்டும்.பார்வையை விலக்கி பக்கத்தில் பார்த்தேன்.அவளும் என்னை  பார்த்து கொண்டிருந்தாள்.அந்த பார்வையில் இருந்தது அதிர்ச்சியா மகிழ்ச்சியா எதுவென தெரியவில்லை.நான் கடந்த காலத்தில் விழ ஆரம்பித்திருந்தேன்.

School Dhevathai -01


நெல்மணிகள் தார்ச்சாலையில் சாய்ந்திருக்கும் ஆலமரத்து சாலையோரம் சைக்கிள் நின்றிருந்தது.அவளை பார்க்க விரும்பிய போதே சைக்கிள் செயினை காலால் கழட்டி விட கற்று கொண்டிருந்தேன்.கைகளில் கிரீஸ் பூசிக்கொண்ட போது நெல் வண்டி ஏற்றிய மூக்கு லாரி வந்து கொண்டிருந்தது. ஊர்க்காரர்கள் யாரும் பார்த்து விட கூடாதென திரும்பி கொண்டேன்.பன்னிரண்டு மைல்  தொலைவில் இருந்து  யாரும் தேடி வரப் போவதில்லை.இருந்தும் தெரிந்த முகங்கள் வந்தால் சொல்வதற்கும் தயாராக பொய் இருந்தது.ஏனோ கைகளில் நடுக்கம் பரவியிருந்தது. எந்த பக்கம் போனாலும் ஒரு கிலோமீட்டர் போனால் தான் ஊர் ஆரம்பிக்கும். இந்த அதிகாலையில் யாருக்கும் தெரியாமல், யாருமில்லாத இந்த சாலையில் தனியே இப்படி நிற்பதெற்கெல்லாம் ஒரே காரணம் தான்.

ஒன்றரை வருடங்களுக்கு பின் அவளை பார்த்தது.கோவில் திருவிழாவிற்கு வந்தவனை,வீட்டுக்கு வந்தே தீர வேண்டுமென வற்புறுத்தி அழைத்து சென்ற நண்பனால் வந்தது.சுடு காப்பியை வாசலில் நின்று ஊதி ஊதி குடித்து கொண்டிருந்த போது, கிழக்கு திசையில் இருந்து அவள் வந்தாள். சூரியன் அப்போது மேற்கு திசையில் இருந்தான். அந்த வெளிச்சத்தில் எலுமிச்சை பழம் மாதிரி அவள் முகம் பிரகாசித்தது. சைக்கிளில் பத்து வினாடிகளுக்குள் அந்த இடத்தை கடந்து போயிருந்தாள்.

பப்ளிக் பரிட்சை முடிந்து சட்டையெல்லாம் இங்க் தெளித்து பெரியாற்று பாலத்தின் கரையில் கடைசியாக பார்த்தது.அதே சைக்கிள் தான் வைத்திருக்கிறாள்.அந்த சின்ன மூக்குத்தியும் கூட மாறவில்லை.ஒன்றரை வருடத்தில் அவளை பார்க்க வேண்டும் என நினைத்ததில்லை. இப்போது உடனே அவளை பார்த்து பேச  வேண்டும் போல் இருந்தது.அது அத்தனை சாத்தியமில்லை. அழைத்து வந்திருந்தவனிடம் சென்று, 'நம்ம கூட படிச்சவங்க எல்லாரும் இப்ப என்ன படிக்கிறாங்க' என்று சுற்றி வளைத்த போது அவள் பக்கத்து ஊரில் படிப்பதையும்  அவள் போகும் சாலை வழியையும் சொன்னான்.

அவள் வந்து போகும் அந்த சாலையில் தான் காலையில் இருந்து நின்று கொண்டிருக்கிறேன். அவனிடம் சொல்லியிருந்தால் கூட வந்திருப்பான்.
இதை ரகசியமாகவே வைக்க விரும்பினேன். யாரிடமும் சொல்லாமல், யாருக்கும் தெரியாமல் நடந்த கதை.எனக்கும் அவளுக்கும் மட்டுமே  தெரிந்த கதை. ரகசியமாய் வளர்ந்த கதை.

முதல் பருவ தேர்வு நடந்து முடிந்த ஒரு சாயங்கால வேளை. வேப்ப மரத்தின் அடியில் தமிழ் புத்தகத்தை தலைகீழாக வைத்து படித்து கொண்டிருந்தேன். வகுப்பிலும் வராண்டாவிலும் பாதி பேர் அமர்ந்திருந்தார்கள்.அவள் வகுப்பினுள் இருந்து வரண்டாவிற்கு வந்து அமர்ந்தாள்.
யாருடனோ  பேசிக்கொண்டே அவள் திரும்பி திரும்பி பார்த்து கொண்டிருந்தாள்.வேப்ப மரத்தை சுற்றிலும் நிறைய பேர் இருந்ததால் யாரை பார்க்கிறாள் என தெரிந்து கொள்ள முடியவில்லை. அவள் மறுபடியும் திரும்பி பார்த்து கொண்டே இருந்தாள்.

இரண்டு நாட்களுக்கு  பிறகு ஒரு மத்தியான நேரம் தண்ணீர் தொட்டி அருகே நின்றிருந்த போது தூர்த்தில் இருந்து அவள் வந்து கொண்டிருந்தாள். தண்ணீர் பிடித்து முகம் கழுவுகையில் அருகில் வந்தாள்.ஒரு பெண்ணின் அருகாமை கூச்சமாக உணர செய்தது.திரும்பி பார்க்க தைரியம் வரவில்லை.நிமிர்ந்த போது அவள்  எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக பார்த்து கொண்டிருந்தாள்.அந்த பார்வையே தாங்கி கொள்ள முடியாத படி இருந்தது.வேப்ப மரத்தடியில் அவள் திரும்பி திரும்பி யாரை பார்த்தாள் என்பது தெரிந்து போயிற்று. அங்கிருந்து நடக்கும் போதும் அவள் முதுகுக்கு பின்னால் பார்ப்பது போல் தோன்றி கொண்டிருந்தது.

முதலில் பயமாக இருந்தது.இதற்கு முன் இப்படி நடந்தது இல்லை.ஆனாலும் ஏதோ ஒன்று அவளை மறுபடியும் பார்க்க சொல்லி கொண்டிருந்தது. யாரிடம் கேட்பதென்றும்  தெரியவில்லை. எவரிடமும் சொல்வதற்கு தயக்கமாய் இருந்தது.ரகசியமாய் வைத்திருப்பதே உள்ளூர கிளுகிளுப்பாக இருந்தது.

மறுநாள் அவள் வகுப்பில் சாதரணமாக இருந்தாள்.திரும்பி பார்த்த போதும் கூட பார்க்காமல் இருந்தாள்.ஒருசேர குழப்பமாகவும் கவலையாகவும் இருந்தது. அன்று மாலை  கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தோம். கிரவுண்ட் சுவர் ஓரத்தில் நின்று கொண்டிருந்த போது அவள் மறுபடியும் வந்தாள்.எல்லோரும் விளையாடி கொண்டிருக்க அவள் வராண்டாவில் அமர்ந்து மைதானத்தை பார்த்து கொண்டிருந்தாள்.
சில நிமிடங்களுக்கு பின் அவள் யாரை பார்க்கிறாள் என தெரிந்தது.தூரத்தில் இருந்ததால்  தைரியம் பெற்று அவளை பார்க்க முடிந்தது.வேகமாக அடிக்கபட்ட பந்து எல்லைக் கோட்டை நோக்கி ஓடி கொண்டிருந்தது.சுய உணர்வு பெற்று ஓடத்துவங்கிய போது பந்து  ஏற்கனவே கோட்டை தாண்டியிருந்தது.

நாளாக நாளாக  எப்போதாவது எங்கேயாவது யாருக்கும் தெரியாமல் பார்த்து கொள்வது போய்  பிரேயர் கூட்டத்தில் கூட பார்க்க ஆரம்பித்திருந்தோம்.அது வகுப்பில் தலையில் சாக்பீஸ் வந்து விழும் வரையிலும் நீண்டது.அவள் தோழிகளுக்கும் தெரிந்திருந்தது. காலை பிரேயர் கூட்டத்தில் பார்க்க  ஆரம்பித்து சாயங்காலம் சைக்கிள் ஸ்டாண்டில் முடிப்பதை  தினசரி நிகழ்வாக மாற்றியிருந்தோம்.

அரையாண்டு தேர்வின் மூன்று நாட்களுக்கு முன்னிருந்து அவளை பார்க்க முடியவில்லை.சரியாக சொல்வதானால்  பிரத்யோகமான அந்த தனிப்பட்ட பார்வைகள் இல்லாமல் போனது.வலிந்து எதிரே போன போதும் கூட அவள் வேறெங்கோ பார்த்தபடியே சென்றாள்.புறக்கணிப்பின் காரணத்தை தேடி மனம் அலைந்து கொண்டிருந்தது. ஐந்தாம் நாள் ஏதோ நடந்து முடிந்த ஒரு  தேர்வொன்றின் மதியம் வராண்டாவில் தனியே படித்து கொண்டிருந்தாள். எதேச்சையாக  எதிரில் நின்ற போது அவள் முகம் பரவசமாகி பின் சோகத்தில் ஆழ்ந்தது.பின் அரையாண்டு தேர்வு முடியும் வரையிலும் அவள் முன் போகவில்லை.

தினத்தந்தியில் இருந்து  'பொதுத் தேர்வில் வெல்வது எப்படி' என பக்கத்து ஊர் பள்ளிக்கூடத்தில் கருத்தரங்கு நடத்தி கொண்டிருந்தார்கள்.எங்கள் பள்ளியில் எல்லாரும் போய் வர அனுமதி கிடைத்திருந்தது.அவள் ஊரில் இருந்து  பஸ்சில்தான் வர வேண்டும். எனக்கு சைக்கிளிலே போகும் தூரமென்றாலும் பஸ்ஸில் போனேன்.கருத்தரங்கில் அவளை பார்க்கும்படியான இடம் அமையவில்லை. சாயங்காலம் திரும்பும் போது அவள் வந்த பஸ்சில் கூட்டமாயிருந்தது. ஒவ்வோர் நிறுத்தத்தில் கூட்டம் குறைய குறைய அவள் கைபிடித்திருந்த  கம்பியின் அருகிலேயே நிற்க முடிந்தது.சில ஊர் தாண்டியவுடன்  முன் சீட்டில் அமர்ந்து தோழியை அடுத்த சீட்டில் அமர்த்தி அவளோடு பேசியபடியே  படிக்கட்டு பக்கம் பார்த்து கொண்டிருந்தாள். பஸ் அடுத்த ஊரும் தாண்டிய பிறகு தான்  இறங்கினேன்.

பொது தேர்வு ஆரம்பிக்க இன்னும் நாற்பது நாட்கள் இருக்கிறது என வகுப்பாசிரியர்  சொன்ன போது தான், அவளிடம் காதலை சொல்ல வேண்டும் 
என தோன்றியது.

தேவலாயத்து கடல் புறா


கடல்புரத்தில் தேவாலயத்தை சுற்றி வந்த புறாவின் காதல் கதை கல்லூரி மூன்றாம் ஆண்டில் ஒப்புக்கொண்டதில் இருந்து தொடங்குகிறது. ஆனால் அவள்  காதல் எட்டு வருடங்களுக்கு முன்பே   ஆரம்பித்திருந்தது.

ஏழாம் வகுப்பு டியூஷன் சென்டரில்  பக்கத்தில் வந்து   அமர்ந்த போது அது காதலாகவெல்லாம் இருக்கவில்லை. அவன்  பன்னிரண்டாம் வகுப்பு. வழுக்குகிற பாவாடை அணிந்து ஆச்சியிடம் திட்டு வாங்கி  பையன்களோடு  பச்சை குதிரை விளையாடிய பால்யத்தில் இருந்து அப்போது தான் அவள்  வந்திருந்தாள். ஆனாலும் ஏதோ ஓர் ஈர்ப்பு இருந்தது. ஒரே டியூஷன் என்றாலும் ஒரே ஸ்கூல் இல்லை. இருவரில் யார்  முதலில் டியூஷன் வருவதென நடக்கும் போட்டிகளில் அவளே முதலில் வருவாள். வீட்டில் இருந்து தின்பண்டங்கள் கொண்டு வந்து தருவாள்.

எட்டாம் வகுப்பு வந்த போது அவன்  ஸ்கூலை  முடித்திருந்தான். டியூஷன் போராடித்தது.மீண்டும்  பார்க்கிற மாதிரி வாய்ப்புகளுக்காக காத்திருந்தாள். அவன் முற்றிலும் தொலைந்து போயிருந்தான்.சில மாதங்களுக்கு பிறகான சோர்வான  ஒரு நாளில்  பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, ஒரு பழைய கிரௌண்டில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த அவனை பார்த்தாள். அவள் எப்போதும் வீடு திரும்புகிற வழியை விட்டு மாறி வந்திருந்தாள். அத்தனை பையன்களின் முன் போய் பேசுகிற தைரியம் வரவில்லை.தன்னை நியாபகம் வைத்திருப்பானா என்பதே சந்தேகமாய் இருந்தது.இருந்தும் சுற்றி போகிற அந்த பாதையையே தேர்ந்தெடுத்தாள்.

இரண்டு ஆண்டுகள் இப்படியான கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு பிறகு,ஆச்சி முன்னே செல்ல, பத்தாம் வகுப்பு ரிசல்ட் பார்த்து விட்டு திரும்பி கொண்டிருக்கிற போது அவன் வந்தான்.கையில் சாக்லேட்டோடு.அது அவனுக்கு  உண்மையான பிறந்த நாளா  என தெரியவில்லை.ஆனால் அவன் அப்படித்தான் சொன்னான்.

கல்லூரி வந்த போது சுனாமி குடியிருப்பில் இருக்கிற அத்தை வீட்டிற்கு இடம் மாற வேண்டியிருந்தது.ஆச்சி வீட்டுக்கு தனியே பஸ் ஏறி 
செல்கிற அளவிற்கு வளர்ந்த பின் 
அவன் வீட்டை கடந்து போகிற சன்னல் ஓரத்தில் அமர்ந்து கொள்வாள்.இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஆச்சியை பார்க்க வருகிற போதெல்லாம் மாமா பையன்கள் அவளை யாரோ விசாரித்தாக சொல்லிவிட்டு போவார்கள்.

இரண்டாம் ஆண்டில் ஒரு சந்தேகம் வந்திருந்தது.அவனுக்கு ஐந்து வயது அதிகம்.கல்யாணம் முடிந்திருக்கலாம். அல்லது யாரையாவது காதலித்து கொண்டிருக்கலாம்.இப்போது அழுகையாக வந்தது.

ஒரு வருடங்களுக்கு பின் அவன் தென்பட்டான். அவன் காதலை சொன்னபோது அவள் முதலில் நம்பவில்லை.அவள் பார்த்த எட்டு ஆண்டுகளை அவன் இவ்வாறாக சொல்ல தொடங்கினான்.

அது ஒவ்வோர் ஞாயிற்று கிழமையும் கிரவுண்ட் வாசலில் நின்றது, அக்காவிடம் ரிசல்ட் கேட்டு சாக்லேட் வாங்கி வந்தது, ஊருக்கு வருகிற நாளை மாமா பையன்களிடம் கேட்டு தெரிந்து கொண்டது என தொடர்ந்தது.அவள் சந்திப்பு எதுவும் தற்காலிகமாக  நிகழவில்லை என விளங்கி கொண்டாள்.

தேவலாயத்து கடல் புறா இப்போது கல்யாணத்துக்காக காத்திருக்கிறது.

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

யட்சி வருகை

பெரிதாய் எந்த திட்டமிடல்களும் 
இல்லாத ஒரு சாமனியனின் வாழ்க்கையில் 
ஒரு நாள் யட்சி நுழைந்தாள். 
எளிதில் உணர்ச்சிவசப்படுவனாகவும் 
அதன் பொருட்டு வருந்துபவனும் 
இருந்த  போது , 
யட்சியோ அதன் மறுகரையில் இருந்தாள்.
ஒரு வழிகாட்டியை போல் அவள் 
தன் பாதையில் அழைத்து சென்றாள்.
எல்லா அசாதாரணமான விஷயங்களும் அவளுக்கு சாதரணமாய் இருந்தது.
என் வாழ்வில் இத்தனை 
குழப்பங்கள் நிறைந்த ஒரு பெண்ணை 
இப்போது தான் பார்க்கிறேன் என்று நினைத்த போது உலகம் அவள் தெளிவிற்காக 
கொண்டாடி கொண்டிருந்தது.
கானகங்களில் அலைந்து 
கொண்டிருந்த போது அவள்தான் 
நகரத்திற்கு அழைத்து வந்தாள்.
மழைதுளிகள் ஒலி எழுப்ப தொடங் கிய
அவள்  குரல் கேட்க தொடங்கும்.
ஒரு நடு இரவில் அழுது கொண்டிருந்த 
போது அவள் Smiley கள் அனுப்பி வைத்தாள்.
நட்சத்திரங்களை எண்ணிய நாட்களில் 
அவள் என் கூட இருந்தாள். 
அன்பை அதன் அத்தனை பரிணமாங்களிலும் 
உணர்த்தியவளை புரிந்து கொள்ள 
முயற்சிப்பதை விட்டுவிட்டு நேசிக்கத்தொடங்கிவிட்டேன்.

தாஜ்மஹால்

பெருமழை பெய்து பாலம் இடிந்ததை ஊர் கூடி பார்த்து கொண்டிருந்த போதுதான்  அவள் நிற்பதை கவனித்தேன்.மழை தண்ணீரில் வெற்றுக்காலுடன் நின்ற அவள் பாதங்களை தான் முதலில் பார்த்தது.
நிமிர்ந்த போது  மின்னல் வெட்டியது போல் இருந்தது  அவள்   நிறம் ; அந்த நிறத்திற்கு அவள்  என்னை  திரும்பி கூட பார்க்கபோவதில்லை  என்றுதான்  அப்போது    தோன்றியது.

இரட்டை சடைபோட்டு ஹைஸ்கூல் யூனிபார்மில் சின்ன  சைக்கிளை நிறுத்தி திரும்பி  பார்க்கும்  வரையிலும்  அப்படித்தான் நினைத்திருந்தேன்.
அவள்  கூட வரும் வானரங்கள் பிள்ளையார் கோவில் தெருவில் பிரிந்துவிட சைக்கிளில் இருந்து  நடக்க  ஆரம்பிப்பாள்.நால்ரோடு தாண்டி பின்னே செல்லும்   தைரியம் எனக்கு  இருந்ததில்லை. தெருமுனையில் நின்றுவிடும் போது திரும்பி திரும்பி பார்த்து விட்டு சைக்கிளில் ஏறி செல்வாள்.

அவளுடன் பேசுவதற்கும் ஒரு மழை வேண்டி இருந்தது.ஒருநாள்  மழை பிடிக்க செருப்பை கழட்டிவிட்டு பிள்ளையார் கோவில் முகப்பிற்கு வந்து நின்றாள்.அதே பாதங்கள். நானுற்றி அம்பது முறை சொல்லிபார்த்த அந்த  கேள்வியை  அவளிடம்  கேட்டேன்.
நீ  என்ன படிக்கிற ?

என்னை விட இரண்டு வகுப்புகள் குறைவாக சொன்னாள். அந்த
மழைக்கும் பிள்ளையாருக்கும்
நன்றிகள்.

உள்ளூர் திருவிழாவில் தண்ணீர் தெளித்து குளிப்பாட்டியிருந்த தார்ச்சாலையில் வைத்து
இடது  கையில் அவள் நம்பர்  எழுதி தந்தாள்.அதிகாலையில் எடுத்த    தாஜ்ஹால் போட்டோ  ஒன்றோடு அவள் பெயரை சேமித்து வைத்திருந்தேன்.
அதிகம்  பேர்  வராத ஒரு பெட்டிக்கடை வாசலில் ஓரத்தில் எனக்காக காத்திருப்பாள்.உள்ளங்கையில் மடித்து வைத்திருக்கும்  திருநீறை  அக்கம்  பக்கம்  பார்த்து பூசிவிடுவாள்.
இது வழக்கம்  தான்.சங்குசக்கரம்  போட்டிருந்த அம்மன் கோவில் சிகப்பு கயிற்றில் கோர்த்த டாலர்தான் அவள்  தந்த முதல் அன்பளிப்பு.
நூல்  நைந்து அறுந்து வீழும் வரையிலும்  அது கழுத்தில் இருந்தது.
கடைக்கார அண்ணனுக்கு எங்களை பற்றி தெரியும்.எப்போதும் அவர் அதை காட்டிக்கொண்டது இல்லை.
ஊர்  திரும்ப வேண்டிய ஓர்  நாள் சீக்கிரம் வந்தது.கடைசி நாள் அவளை
பார்க்கும் போது தாடிமுளைக்க ஆரம்பித்திருந்தது.
இனிமேல் ஷேவ் செய்ய வேண்டும்.
மூன்று நாட்களாக ஒரே சட்டையை  போட்டிருப்பதாக சொன்னாள்.

சோனி எரிக்சனின் மிகப்பழைய மாடல் ஒன்றில் லாக் எடுக்கும்  போது தவறவிட்ட அழைப்புகள் முன் வந்து நிற்கும்.அதன்பிறகான நாட்களில்
எப்போது  எழும்போதும்  போனில் தாஜ்மஹால் காட்டும். ஆறுமாதங்களுக்கு பிறகு  ஒரு நாள்  பிள்ளையார் கோவில் தெருவில்
நின்று கொண்டிருந்தேன்.
தாவணி கட்டியிருந்தாள்.
நுனி தலைப்பை கையில் பிடித்தபடி வேகமாக நடந்து வந்து வந்தாள்.

ரெட்டை சடை போட்டு ஹைஸ்கூல் யூனிபார்மில்  நால்ரோடு வரை சைக்கிள்  தள்ளி வந்த  அந்த சின்ன பெண்  இப்போது இல்லை.
வளர்ந்திருக்கிறாள்.தாவணியில் வெட்கம்   அவளை  அழகாக்கி  கொண்டிருந்தது. பிரிண்ட் செய்யபட்ட
பஸ்டிக்கட் தாளை திருப்பி என் புது நம்பரை எழுதி கொடுத்தபோது வாங்கிகொண்டாள்.தெருமுனையில் விடைபெற்று பஸ்  ஏறும் போது  தாஜ்மஹாலிடம்  இருந்து  அழைப்பு வந்தது.அவள்  பேசும் போது அழுதிருப்பது  தெரிந்தது.

ஆறுவருடங்களுக்கு  பிறகு அரசாங்கத்தில்  பழைய பாலத்தை இடித்துவிட்டு புது பாலம்  கட்டியிருந்தார்கள். பாலத்தை பஸ் கடக்கும் போது கடைசி படிக்கட்டில் நின்று கொண்டேன்.

தூரத்தில் அவள்  வெற்றுக்காலுடன் மழைத்தண்ணியை தள்ளி விளையாடி
கொண்டிருந்தாள்.

கடைசி வனம்

சஞ்சாரமற்ற ஓர் அடர்வனம் தீப்பிடிக்கிறது.
அந்தியில் நட்சத்திரம் 
மறைந்து தீப்பிழம்பு காடெங்கும் 

சாம்பல் பரப்புகிறது.
வெடித்து கிளம்பும் சுள்ளிகள் புகை 

நடுவே நடனம் புரிகின்றன.
பெறுங்காற்று காடு முழுவதையும் 

தின்ன கொடுக்கிறது.
பொருளற்ற சத்தங்கள்
திசையெங்கும் ஒலிக்கிறது.
ஆர்ப்பரிக்கும் நெருப்பில்
மரண ஓலங்கள்
காணமல் போயிருந்தது.
வீடு திரும்பும் பறவைகள்
வீட்டை தொலைத்து விட்டிருந்தன.
விடியலில் மழை பெய்து,
தீ உயிர்விடுகிறது.
இரண்டு திங்களில்
எரிந்த மரக்களைகளில் தளிர் எட்டிபார்க்க
நகரமயமாக்கலில் எஞ்சியிருக்கும்
கடைசி வனம்
புதுயுகத்தை ஆரம்பிக்கிறது.